திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
நான்காம் திருமுறை
4.37 திருநெய்த்தானம்
காலனை வீழச் செற்ற
    கழலடி இரண்டும் வந்தென்
மேலவா யிருக்கப் பெற்றேன்
    மேககத் தோன்று கின்ற
கோலநெய்த் தான மென்னுங்
    குளிர்பொழிற் கோயில் மேய
நீலம்வைத் தனைய கண்ட
    நினைக்குமா நினைக்கின் றேனே.
1
காமனை யன்று கண்ணாற்
    கனலெரி யாக நோக்கித்
தூபமுந் தீபங் காட்டித்
    தொழுமவர்க் கருள்கள் செய்து
சேமநெய்த் தான மென்னுஞ்
    செறிபொழிற் கோயில் மேய
வாமனை நினைந்த நெஞ்சம்
    வாழ்வுற நினைந்த வாறே.
2
பிறைதரு சடையின் மேலே
    பெய்புனற் கங்கை தன்னை
உறைதர வைத்த எங்கள்
    உத்தமன் ஊழி யாய
நிறைதரு பொழில்கள் சூழ
    நின்றநெய்த் தான மென்று
குறைதரும் அடிய வர்க்குக்
    குகனைக் கூட லாமே.
3
வடிதரு மழுவொன் றேந்தி
    வார்சடை மதியம் வைத்துப்
பொடிதரு மேனி மேலே
    புரிதரு நூலர் போலும்
நெடிதரு பொழில்கள் சூழ
    நின்றநெய்த் தானம் மேவி
அடிதரு கழல்கள் ஆர்ப்ப
    ஆடுமெம் அண்ண லாரே.
4
காடிட மாக நின்று
    கனலெரி கையி லேந்திப்
பாடிய பூதஞ் சூழப்
    பண்ணுடன் பலவுஞ் சொல்லி
ஆடிய கழலார் சீரார்
    அந்தண்நெய்த் தானம் என்றுங்
கூடிய குழக னாரைக்
    கூடுமா றறிகி லேனே.
5
வானவர் வணங்கி யேத்தி
    வைகலும் மலர்கள் தூவத்
தானவர்க் கருள்கள் செய்யும்
    சங்கரன் செங்கண் ஏற்றன்
தேனமர் பொழில்கள் சூழத்
    திகழுநெய்த் தானம் மேய
கூனிள மதியி னானைக்
    கூடுமா றறிகி லேனே.
6
காலதிற் கழல்க ளார்ப்பக்
    கனலெரி கையில் வீசி
ஞாலமுங் குழிய நின்று
    நட்டம தாடு கின்ற
மேலவர் முகடு தோய
    விரிசடை திசைகள் பாய
மாலொரு பாக மாக
    மகிழ்ந்தநெய்த் தான னாரே.
7
பந்தித்த சடையின் மேலே
    பாய்புன லதனை வைத்து
அந்திப்போ தனலு மாடி
    அடிகள்ஐ யாறு புக்கார்
வந்திப்பார் வணங்கி நின்று
    வாழ்த்துவார் வாயி னுள்ளார்
சிந்திப்பார் சிந்தை யுள்ளார்
    திருந்துநெய்த் தான னாரே.
8
சோதியாய்ச் சுடரு மானார்
    சுண்ணவெண் சாந்து பூசி
ஓதிவா யுலகம் ஏத்த
    உகந்துதாம் அருள்கள் செய்வார்
ஆதியாய் அந்த மானார்
    யாவரும் இறைஞ்சி யேத்த
நீதியாய் நியம மாகி
    நின்றநெய்த் தான னாரே.
9
இலையுடைப் படைகை யேந்தும்
    இலங்கையர் மன்னன் றன்னைத்
தலையுடன் அடர்த்து மீண்டே
    தானவற் கருள்கள் செய்து
சிலையுடன் கணையைச் சேர்த்துத்
    திரிபுரம் எரியச் செற்ற
நிலையுடை யடிகள் போலும்
    நின்றநெய்த் தான னாரே.
10
திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
நான்காம் திருமுறை
4.89 திருநெய்த்தானம் - திருவிருத்தம்
பாரிடஞ் சாடிய பல்லுயிர்
    வானம ரர்க்கருளிக்
காரடைந் தகடல் வாயுமிழ்
    நஞ்சமு தாகவுண்டான்
ஊரடைந் திவ்வுல கிற்பலி
    கொள்வது நாமறியோம்
நீரடைந் தகரை நின்றநெய்த்
    தானத் திருந்தவனே.
1
தேய்ந்திலங் குஞ்சிறு வெண்மதி
    யாய்நின் திருச்சடைமேற்
பாய்ந்தகங் கைப்புனற் பன்முக
    மாகிப் பரந்தொலிப்ப
ஆய்ந்திலங் கும்மழு வேலுடை
    யாயடி யேற்குரைநீ
ஏந்திள மங்கையும் நீயும்நெய்த்     தானத் திருந்ததுவே.
2
கொன்றடைந் தாடிக் குமைத்திடுங்
    கூற்றமொன் னார்மதின்மேற்
சென்றடைந் தாடிப் பொருததுந்
    தேசமெல் லாமறியுங்
குன்றடைந் தாடுங் குளிர்பொழிற்
    காவிரி யின்கரைமேற்
சென்றடைந் தார்வினை தீர்க்குநெய்த்
    தானத் திருந்தவனே.
3
கொட்டு முழவர வத்தொடு
    கோலம் பலஅணிந்து
நட்டம் பலபயின் றாடுவர்
    நாகம் அரைக் கசைத்துச்
சிட்டர் திரிபுரந் தீயெழச்
    செற்ற சிலையுடையான்
இட்ட முமையொடு நின்றநெய்த்
    தானத் திருந்தவனே.
4
கொய்மலர்க் கொன்றை துழாய்வன்னி
    மத்தமுங் கூவிளமும்
மெய்மலர் வேய்ந்த விரிசடைக்
    கற்றைவிண் ணோர்பெருமான்
மைமலர் நீல நிறங்கருங்
    கண்ணியோர் பால்மகிழ்ந்தான்
நின்மல னாடல் நிலயநெய்த்
    தானத் திருந்தவனே.
5
பூந்தார் நறுங்கொன்றை மாலையை
    வாங்கிச் சடைக்கணிந்து
கூர்ந்தார் விடையினை யேறிப்பல்
    பூதப் படைநடுவே
போந்தார் புறவிசை பாடவும்
    ஆடவுங் கேட்டருளிச்
சேர்ந்தார் உமையவ ளோடுநெய்த்
    தானத் திருந்தவனே.
6
பற்றின பாம்பன் படுத்த
    புலியுரித் தோலுடையன்
முற்றின மூன்று மதில்களை
    மூட்டி யெரித்தறுத்தான்
சுற்றிய பூதப் படையினன்
    சூல மழுவொருமான்
செற்றுநந் தீவினை தீர்க்குநெய்த்
    தானத் திருந்தவனே.
7
விரித்த சடையினன் விண்ணவர்
    கோன்விட முண்டகண்டன்
உரித்த கரியுரி மூடியொன்
    னார்மதில் மூன்றுடனே
எரித்த சிலையினன் ஈடழியா
    தென்னை ஆண்டுகொண்ட
தரித்த உமையவ ளோடுநெய்த்
    தானத் திருந்தவனே.
8
தூங்கான் துளங்கான் துழாய்கொன்றை
    துன்னிய செஞ்சடைமேல்
வாங்கா மதியமும் வாளர
    வுங்கங்கை தான்புனைந்தான்
தேங்கார் திரிபுரந் தீயெழ
    வெய்து தியக்கறுத்து
நீங்கான் உமையவ ளோடுநெய்த்
    தானத் திருந்தவனே.
9
ஊட்டிநின் றான்பொரு வானில
    மும்மதில் தீயம்பினால்
மாட்டிநின் றான்அன்றி னார்வெந்து
    வீழவும் வானவர்க்குக்
காட்டிநின் றான்கத மாக்கங்கை
    பாயவோர் வார்சடையை
நீட்டிநின் றான்றிரு நின்றநெய்த்
    தானத் திருந்தவனே.
10
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com